நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலி!
நீட் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருந்த மாணவர் பலியானது குறித்து...
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள விடுதியில் உத்தரகண்டைச் சேர்ந்த மாணவர் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்குத் (நீட்) தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தங்கியிருந்த விடுதியின் நான்காவது மாடியில் இருந்து சனிக்கிழமை (மே 2) காலை தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
முதல் கட்ட விசாரணையில், பலியானவர் உத்தரகண்டின் அல்மோராவைச் சேர்ந்த தீக்சித் ராஜேஸ்வரி (20) எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வாளர் தேவேஷ் பரத்வாஜ் கூறுகையில், “லேண்ட்மார்க் சிட்டியில் உள்ள விடுதியின் நான்காவது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்த தீக்சித் ராஜேஸ்வரி, அங்கிருந்து தவறி கீழே விழுந்தார்.
Advertisement
Advertisement
காலை 7 மணிக்கு சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அந்த இடத்துக்கு விரைந்தனர். அதன்பிறகு, அந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பலியானதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்” எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாகவும், உடல்கூறாய்வு செய்யப்பட்ட பிறகே பலிக்கான சரியான காரணத்தைக் கண்டறிய முடியும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வு வரும் மே 3 ஆம் தேதி, நாடு முழுவதும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.