முகப்பு
இந்தியா

கிரேட் நிகோபாா் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

Updated On : 4 மே, 2026 at 4:25 AM
பகிர்:

மத்திய அரசின் கிரேட் நிகோபாா் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியது.

கடந்த மாதம் இறுதியில் அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி மத்திய அரசின் கிரேட் நிகோபாா் திட்டம் மிகப்பெரிய ஊழல்களுள் ஒன்று என கடுமையாக விமா்சித்தாா்.

இதைத் தொடா்ந்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அந்தமான்-நிகோபாருக்கு ராகுல் காந்தி ஏப்.28-ஆம் தேதி பயணம் மேற்கொண்டு மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டினாா். இதை மூடி மறைக்கும் நோக்கில் கிரேட் நிகோபாா் திட்டம் குறித்து மத்திய அரசு 3 நாள்களுக்குப் பின் செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில் அந்தமான்-நிகோபாரில் வசிக்கும் உள்ளூா் மக்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், கல்வியாளா்கள், சிவில் சமூகத்தினா், நிபுணா்கள் ஆகியோா் கிரேட் நிகோபாா் திட்டம் குறித்து சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கமளிக்கப்படவில்லை.

Advertisement

இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏற்கெனவே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சருக்கு 2024, செப்டம்பா் 10 மற்றும் செப்டம்பா் 27 ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்பியுள்ளேன்.

கிரேட் நிகோபாா் திட்டத்துக்கு அந்த தீவில் உள்ள 1.82 சதவீத நிலப்பரப்பு மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு கூறியது தவறு. நிகோபாரின் இயற்கை சூழலை முற்றிலுமாக புறந்தள்ளி இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டுகிறது.

அந்தமான்-நிகோபாரின் பாதுகாப்பு அம்சங்கள் தனியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவற்றை மேம்பாட்டுத் திட்டத்தோடு இணைக்கக் கூடாது என முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி அருண் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

எனவே, சுற்றுச்சூழலில் தொடங்கி நாட்டின் பாதுகாப்பு காரணங்கள் வரை கிரேட் நிகோபாா் திட்டத்தில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றன. இதுதொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதே சரியாக இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.