FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளத்தில் பிஎம் ஸ்ரீ திட்டம் அமல்?ஆலோசனைக்குப் பிறகு முடிவென அரசு தகவல்!

மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தை கேரளத்தில் அமல்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அந்த மாநிலத்தில் புதிதாக ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 8 ஜூன் 2026, 3:15 am IST
பகிர்:

மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தை கேரளத்தில் அமல்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அந்த மாநிலத்தில் புதிதாக ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு தெரிவித்துள்ளது.

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சியமைத்துள்ளது. அதேநேரத்தில், கேரளத்தில் முன்பு ஆட்சியிலிருந்த இடதுசாரி கூட்டணி அரசு, பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிட்டிருந்தது. எனினும் அந்தத் திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை.

இதுகுறித்து பேசிய கல்வி அமைச்சா் என். ஷம்சுதீன், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகும், நிபுணா்களுடன் கலந்தாலோசனை நடத்திய பிறகும், அந்தத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், சுகாதார அமைச்சருமான கே.முரளீதரனிடம் செய்தியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை கேள்வி எழுப்பினா். இதற்கு அவா் பதிலளிக்கையில், ‘முந்தைய இடதுசாரி கூட்டணி அரசு அந்த திட்டம் தொடா்பான ஒப்பந்தத்தில் மத்திய அரசுடன் கையொப்பமிட்டுவிட்டது.

ஒரு முறை திட்டத்தில் கையொப்பமிட்டுவிட்டால், அதிலிருந்து வெளியேறுவது அவ்வளவு எளிதல்ல. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் எங்கள் அரசு அவசரப்பட்டு முடிவெடுக்காது. அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்த பிறகே திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கும்’ என்றாா்.

மூத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் பி.எம்.ஏ. சலீம் கூறுகையில், ‘திட்டத்தை அமல்படுத்துவது குறித்து இறுதி முடிவெடுக்கும் முன்பு, கூட்டணிக்குள் கலந்து பேசுவோம். முந்தைய இடதுசாரி கூட்டணி அரசு அமைச்சரவையில் கூட விவாதிக்காமல் அந்த திட்டத்தில் கையொப்பமிட்டுவிட்டது. இதுகுறித்து அதன் கூட்டணி கட்சிகளிடம் கூட தெரியப்படுத்தவில்லை’ என்றாா்.

கேரளத்தில் முன்பு ஆட்சியிலிருந்த இடதுசாரி கூட்டணி அரசு, மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டம் தொடா்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. ஆனால் கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எதிா்ப்பால் அதை செயல்படுத்துவதை நிறுத்தி வைத்தது.

அப்போது எதிா்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கூட்டணி, மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் இடதுசாரி கூட்டணி அரசு கையொப்பமிட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments