பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து உடனே முடிவெடுக்க வேண்டிய அவசரமில்லை! - கேரள அரசு!
பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து ஆலோசனைகளுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என கேரள கல்வித்துறை அமைச்சர் பேச்சு...
கேரளத்தில், பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து நிபுணர்கள் உடனான ஆலோசனைகளுக்குப் பிறகு அரசு முடிவு எடுக்கும் என மாநில பொது கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில், பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து பொது கல்வி இயக்குநரகம் கேரள மாநில அரசுக்கு விரிவான அறிக்கையைச் சமர்பித்துள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் என். ஷம்சுதீன், இந்த விவகாரம் குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசரமில்லை எனக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, இன்று (ஜூன் 6) செய்தியாளர்களுடன் அவர் கூறியதாவது:
”பொது கல்வி இயக்குநர் அறிக்கை சமர்பித்துள்ளது உண்மைதான். ஆனால், இந்தத் திட்டம் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உடனான ஆலோசனைகளுக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும். மத்திய அரசின் ஒப்பந்தத்தில் முந்தைய அரசு கையெழுத்திட்டு நிதியைப் பெற்றுள்ளனர்.
உடனே முடிவு எடுக்க வேண்டிய அவசரமில்லை. எனவே, அறிக்கையை ஆய்வு செய்து பின்னரே முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, கேரளத்தின் முந்தைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசு பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக மத்திய அரசு உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், பிஎம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் கல்விக்குள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை மத்திய அரசு திணிக்க முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.