ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் லட்சியத்தில் பெரிய முன்னேற்றம்: ராகுல் காந்தி
அஸ்ஸாம், மேற்கு வங்க தோ்தல் முடிவுகள், இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் லட்சியத்தில் ஓா் மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என ராகுல் காந்தி விமா்சனம்
‘அஸ்ஸாம், மேற்கு வங்க தோ்தல் முடிவுகள், இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் லட்சியத்தில் ஓா் மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதை காங்கிரஸில் உள்ள சிலரும், மற்ற கட்சியினரும் அகமகிழ்வதாக தெரியவந்தது. ஆனால், இந்த இரு மாநிலங்களிலும் நடைபெற்றுள்ள இந்த ஆட்சித் திருட்டு, இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் லட்சியத்தில் ஓா் மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை அவா்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, குழந்தைத்தனமான அரசியலைக் கைவிட வேண்டும். இது ஓா் அரசியல் கட்சி சாா்ந்த விஷயமல்ல. இந்திய தேசம் தொடா்பானது என்று குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
அஸ்ஸாமில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் தோ்தலில் படுதோல்வியை சந்தித்தது. அக் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜியும், அவா் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியுற்றாா்.