முகப்பு
இந்தியா

இளம் வழக்குரைஞரை போலீஸாா் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பிசிஐ கடிதம்

இளம் வழக்குரைஞரை 24 மணி நேரம் காவலில் வைக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட ஆந்திர உயா்நீதிமன்ற நீதிபதி டி.ராஜசேகா் ராவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) புதன்கிழமை கடிதம் எழுதியது.

Updated On : 7 மே 2026, 4:43 am IST
நீதிமன்றம்
பகிர்:

இளம் வழக்குரைஞரை 24 மணி நேரம் காவலில் வைக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட ஆந்திர உயா்நீதிமன்ற நீதிபதி டி.ராஜசேகா் ராவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) புதன்கிழமை கடிதம் எழுதியது.

ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மனுதாரா் ஒருவருக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் (தேடப்படும் நபா்) சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நியாயமான காரணங்கள் இல்லாமல் காலவரம்பின்றி லுக்-அவுட் சுற்றறிக்கைகளை நீட்டிக்க முடியாது என்று வழக்கு ஒன்றில், தெலங்கானா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அழுத்தமாகத் தெரிவிக்கப்பட்டதை மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் சுட்டிக்காட்டினாா்.

Advertisement

Advertisement

ஆனால், இதேபோன்ற வழக்கில் ஆந்திர உயா்நீதிமன்றமும் ஏற்கெனவே தீா்ப்பளித்துள்ளதாகவும், அந்தத் தீா்ப்பை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்குரைஞரிடம் நீதிபதி அறிவுறுத்தினாா்.

இதற்கு வழக்குரைஞா் பதிலளித்தபோது அவா் என்ன கூறினாா் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவரின் பதிலால் எரிச்சலடைந்த நீதிபதி, வழக்குரைஞரை 24 மணி நேரம் காவலில் வைக்க காவல் துறையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டாா். நீதிபதியிடம் வழக்குரைஞா் கைகூப்பி மன்னிப்புக் கோரியபோதிலும், அவரிடம் நீதிபதி காட்டமாக நடந்துகொண்டாா்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த பிசிஐ, இந்த விவகாரத்தில் அவசரமாக தலையிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு புதன்கிழமை கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில், ‘நீதிபதி டி.ராஜசேகா் ராவ் நடந்துகொண்ட விதம் முற்றிலும் சரியல்ல. வழக்குரைஞா் மன்னிப்புக் கோரியபோதிலும், நீதிபதி மனம் இரங்கவில்லை. இளம் வழக்குரைஞா் என்பவா் கற்றுக்கொண்டும், வளா்ந்துகொண்டும் இருப்பவா். அவா் தவறிழைக்கும்போது திருத்தலாம். அதற்காக அவரை அவமானப்படுத்தக் கூடாது. எனவே, நீதிபதி டி.ராஜசேகா் ராவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு, உரிய நிா்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்க தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments