17.6.1976: "மிஸா" ஷரத்து 24 மாத காலம் நீடிப்பு - காவலில் வைக்க காரணம் கூற வேண்டியதில்லை
"மிஸா" ஷரத்து 24 மாத காலம் நீடிக்கப்பட்டது பற்றி...
புது டில்லி, ஜூன். 16 - உள்நாட்டு பந்தோபஸ்து பராமரிப்புச் சட்டத்தை (மிஸா) மேலும் திருத்தும் அவசரச் சட்டத்தை இன்று ராஷ்டிரபதி பிறப்பித்தார்.
சட்டத்தின் 16(ஏ) ஷரத்தை 24 மாதங்களுக்கு அது நீடிக்கிறது. காவலில் வைக்கப்பட்டவருக்கு அதன் காரணங்களை தெரிவிக்காமலிருப்பதற்கு இந்த ஷரத்து வகை செய்கிறது.
அவசர நிலையை சரிவர செயல்படுத்துவதற்கு இந்த அவசரச் சட்டம் தேவைப்படுவதாக பத்திரிகைக் குறிப்பு ஒன்று கூறுகிறது.
Advertisement
Advertisement
சென்ற ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு, "மிஸா"வில் இந்தப் பிரிவு (16ஏ) சேர்க்கப்பட்டது. காவலில் வைப்பதற்கான காரணங்களை இவ்வாறு காவலில் வைக்கப்படும் நபருக்குத் தெரிவிக்காமல் ஒருவரை ஓராண்டுக்குக் காவலில் வைக்க இந்தப் பிரிவு அரசுக்கு அதிகாரம் வழங்கியது.
1971ம் வருஷத்திய உள்நாட்டு பந்தோபஸ்து பராமரிப்புச் சட்டத்தில் (மூலச்சட்டம்) 16ஏ பிரிவில் "12 மாதங்கள்" என்ற சொல்லுக்குப் பதிலாக "24 மாதங்கள்” என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது.
த.நா. கவர்னராக சுகாதியா பதவி ஏற்பு
சென்னை, ஜூன். 16 - தமிழ்நாட்டின் புதிய கவர்னராக, மோகன்லால் சுகாதியா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
சென்னை ஹைகோர்ட் பிரதம நீதிபதி பி.எஸ். கைலாசம் இன்று முற்பகல் ராஜாஜி மண்டபத்தில் மோகன்லால் சுகாதியாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால், ஆங்கிலத்தில் புதிய கவர்னர் சுகாதியா பதவிப் பிரமாணம் செய்து கொண்டு, அதற்கு அறிகுறியாக புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
பதவிப் பிரமாணம் செது கொள்வதற்கு முன்னதாக ராஜ் பவனிலிருந்து மோகன்லால் சுகாதியாவும், அவரது மனைவி திருமதி இந்துபாலாவும் மவுண்ட் ரோடு வழியாக காரில் ராஜாஜி மண்டபம் நோக்கி வந்தனர். மவுண்ட்ரோடு போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆபீஸ் அருகே கவர்னர் தம்பதியினரைக் குதிரைப் படை போலீசார் அணிவகுத்து எதிர்கொண்டு திறந்த காரில் ராஜாஜி மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ராஜாஜி மண்டபத்தின் பிரதான வாயில் அருகே கவர்னர் தம்பதியினர் வந்ததும் போலீஸ் பேன்டு முழங்கியது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வி. கார்த்திகேயன் புதிய கவர்னரை வரவேற்று, கவர்னரின் ஆலோசகர்கள் தவே, ஆர். வி. சுப்ரமணியம், முப்படைத் தளபதிகள், இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை சுகாதியா ஏற்றுக் கொண்டார். ...