FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

31.7.1976: தமிழகத்தில் மீண்டும் லாட்டரிச் சீட்டுத் திட்டம் அமலாகும்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

Updated On : 31 ஜூலை 2026, 4:45 am IST
31.7.1976 - Dinamani
பகிர்:

சென்னை, ஜூலை: 30 - தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரிச் சீட்டுத் திட்டத்தை அமல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் 2 மாத காலத்திற்குள்ளாக மீண்டும் பரிசுச் சீட்டுத் திட்டம் அமலுக்கு வரும்.

லாட்டரிச் சீட்டு ஏஜெண்டுகள் நியமனம், சீட்டுகள் அச்சடிப்பு ஆகிய முன்னேற்பாடுகள் செய்து முடிக்கவேண்டியிருப்பதால் இந்த இரண்டு மாத காலம் அவசியமாகிறது என்று நிதித் துறைச் சிறப்புச் செயலாளர் எஸ். குகன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே அமலில் இருந்த பரிசுச் சீட்டு திட்டத்திலோ அல்லது பரிசுகளின் எண்ணிக்கை, பரிசுத் தொகை ஆகியவற்றிலோ எந்தவிதமான மாறுதலும் செய்ய உத்தேசிக்கப்படவில்லை. முன்பிருந்த முறையே நீடிக்கும் என்று குகன் சொன்னார்? ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் சீட்டுகள் ஒவ்வொரு வரிசைக்குமாக இரண்டு வரிசைகள் வெளியிடப்படும். இது தவிர தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ பண்டிகை தினங்களுக்காக சிறப்பு பரிசுச் சீட்டுகள் வெளியிட இப்போதைக்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நடப்பு நிதி ஆண்டில் பரிசுச் சீட்டு திட்டத்தின் மூலம் அரசுக்கு நிகர வருமானமாகக் கிடைக்கும் முதல் ஒரு கோடி ரூபாயை வறட்சிப் பகுதிகளில் குடிநீர் வழங்கு திட்டங்களுக்காகச் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் உள்ள தொகையை ஹரிஜனங்களுக்கு வீட்டு மனை வழங்குவதற்காக நில ஆர்ஜிதத்திற்குச் செலவிடப்படும். ஒவ்வொரு ஆண்டும், இதே போல லாட்டரிச் சீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் என்றும் குகன் சொன்னார்.

லாட்டரிச் சீட்டு திட்டத்தை மீண்டும் துவக்குவதன் மூலம் உடனடியாக இரண்டாயிரத்து ஐந்நூறு லாட்டரி சீட்டு ஏஜெண்டுகளுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உப வருமானத்திற்கும் வழி ஏற்படும். 1975ம் ஆண்டு செப்டம்பர் 15ந் தேதி லாட்டரிச் சீட்டு திட்டம் கைவிடப்பட்டபோது ஏஜெண்டுகளாகப் பதிவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு மீண்டும் ஏஜென்சிக்காகப் பதிவு செய்து கொள்ளவும் ஏஜெண்டுகளாக நியமனம் பெறவும் வாய்ப்பு அளிக்கப்படும்.

1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மறைந்த அண்ணாதுரை தலைமையில் முதலாவது தி.மு.க. அமைச்சரவை அமைந்தபோது மாநிலத்தில் லாட்டரிச் சீட்டுத் திட்டம் அமலாக்கப்பட்டது. 1968ம் ஆண்டு ஆகஸ்ட்15ந் தேதி ஆரம்பமான இந்த லாட்டரி சீட்டுத் திட்டம் 1975ம் ஆண்டு செப்டம்பர் முதல் ரத்து செய்யப்பட்டது.

லாட்டரிச் சீட்டு திட்டம் மூலமாக மாநில அரசுக்கு மொத்தமாக ரூ 23 கோடியே 10 லட்சம் வருமானம் கிடைத்தது. 1975ஆம் ஆண்டு இத்திட்டம் கைவிடப்பட்ட போது அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு நிகர வருமானமாக ஒன்றரை முதல் இரண்டு கோடி ரூபாய் வரையில் கிடைத்து வந்தது. இந்த வருமானம் கல்வி, சுகாதார மேம்பாடு, சமுதாய நலன் போன்ற திட்டங்களுக்குச் செலவிடப்பட்டதுடன் தேசீயப் பாதுகாப்பு நிதிக்கும் இதிலிருந்து 2 கோடியே 12 இலட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

summary

31.7.1976: The lottery scheme to be reintroduced in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments