27.8.1976: தினசரி 15 லட்சம் யூனிட் மின்சாரம் தமிழகத்திற்கு ஆந்திரா தருகிறது
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
சென்னை, ஆக. 26 - தமிழ்நாடு சென்ற சில தினங்களாக தினசரி 15 லட்சம் யூனிட் மின்சாரத்தை ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து பெறுகிறது என்று மாநில மின்சார போர்டு தலைவர் எஸ்.பி. அம்புரோஸ் இன்று கூறினார்.
தெற்குப் பிராந்திய மின்சார போர்டுகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அம்புரோஸ் சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தபோது, ஆந்திரப்பிரதேசத்தால் கொடுக்கக்கூடிய அளவு மின்சாரத்தைத் தமிழ்நாட்டிற்கு அளிக்குமாறு ஆந்திரப் பிரதேச மாநில மின்சாரபோர்டின் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.
ஒரிஸ்ஸா மாநிலத்தில் மின்சாரம் சிறிது உபரியாக உள்ளது. அது ஆந்திரப் பிரதேசத்திற்கு சப்ளை செய்யப்படுகிறது. அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு தினசரி 12 லட்சம் யூனிட் சப்ளை செய்யப்படுகிறது. ஆந்திரப்பிரதேசம் தொடர்ந்து இவ்வாறு சப்ளை செய்யும் என்று நம்புவதாக அம்புரோஸ் கூறினார். கேரளத்திலிருந்து மின்விசை பெறும் சாத்தியம் பற்றி அவர் குறிப்பிட்டார். கேரள மாநிலத்தில் உள்ள நீர் மின்சார நிலையங்களில் சேமிப்பு நிலவரம் அபிவிருத்தி அடைந்தால் தமிழ்நாட்டுக்கு சப்ளை செய்வது பற்றி கேரளம் தெரிவிக்கக்கூடும் என்றும், தற்போதைக்குத் தமிழ்நாட்டிற்கு சப்ளை செய்யும் நிலையில் கேரளம் இல்லை என்றும் அவர் கூறினார். ...
Advertisement
Advertisement
சேலம் உருக்காலை திட்டத்தை செயல்படுத்த மந்திரி உறுதி
புதுடில்லி, ஆக. 26- சேலம் உருக்காலைத் திட்டத்தைக் கைவிடும் பிரச்னை இல்லை என்றும், அதை நிறைவேற்ற நிதி வசதிகளைக் காண அரசு விரும்புவதாகவும் லோக்சபையில் தமிழ்நாடு அங்கத்தினர்களுக்கு உருக்கு, சுரங்க மந்திரி சந்திர ஜித் யாதவ் இன்று உறுதி கூறினார்.
திட்டத்துக்கு நிதி வசதி காண வேண்டும் என்று பிரதமரே விரும்புகிறார், ஆகவே அது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று அவர் காத்தமுத்துவிடம் கூறினார்.
திட்டத்துக்கு ரூ. 516 கோடி செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. ஆகவே நிதி வசதி காணும் பெரிய பிரச்னை இருப்பது சந்தேகமில்லை. இருந்த போதிலும் திட்டத்துக்கு நிதி வசதி காண அரசு விரும்புகிறது என்று யாதவ் சொன்னார்.
பிரதமர் தலைமையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில், திட்டம் வர்த்தக ரீதியில் கட்டுபடியாகக் கூடியதா என்பதை பரிசிலிக்க ஒரு விசேஷ குழு அமைக்கப்பட்டதாக யாதவ் கூறினார். குழுவின் அறிக்கை தாக்கலாகியுள்ளது. அது பரிசீலிக்கப்படுகிறது என்றார்.
27.8.1976: Andhra supplies 1.5 million units of electricity daily to Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.