13.8.1976: ஜெய்கர் கோட்டையில் புதையல் பற்றிய தடயமே இல்லை
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
ஜெய்கர், ஆக: 12- ராஜஸ்தானில் உள்ள ஜெய்கர் கோட்டையில் இரண்டு மாத காலமாக நடந்து வரும் "புதையல் வேட்டை" தொடர்ந்து நீடிக்கும். இதுவரையில் இங்கு எந்தவிதப் புதையல் பற்றி தடயமே கிடைக்கவில்லை.
இத்தகவலை, நேர்முக வரிகள் போர்டு தலைவர் எஸ். ஆர். மேத்தா இன்று ஜெய்கர் நகரில் அறிவித்தார். இன்னும் புதையல் கிடைக்கவில்லை என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
ஜெய்கர் கோட்டையில் அக்பர் காலத்திய புதையல் உள்ளது என்றும், அங்கு பல கோடி மதிப்புள்ள தங்க நாணயங்களும் நகைகளும் உள்ளதாகவும் வருமான வரி அதிகாரிகளுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அந்தப் புதையல் இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஒரு வரைபடமும் கிடைத்தது. இந்த வரைபடத்தைச் சோதனை செய்ததில், அது மிகவும் புராதன காலத்தது என்று அதிகாரிகள் உறுதியாக அறிந்தனர். அதன் பிறகு ஜெய்கர் கோட்டையில் புதையல் வேட்டையில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
இரண்டு மாத காலமாக வேட்டை நீடித்தும், இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லை என்று நேர்முக வருமான வரிகள் போர்டு தலைவர் எஸ். ஆர். மேத்தா இன்று தெரிவித்தார்.
இங்கு புதையல் இருப்பதாக தாங்கள் நம்புவதாகவும், இன்னும் எத்தனை காலத்துக்குப் புதையல் வேட்டை நீடிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.
இதுவரை, நாங்கள் எந்த பாதாள அறையையும் கண்டு பிடிக்கவில்லை. அந்த அறைக்கு சாவியும் கிடைக்கவில்லை. எந்த வித தங்க நாணயங்களும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
"புதையல் வேட்டை பிரம்மாண்டமான நடவடிக்கை ஆகும். பல குளங்களின் நீரை வெளியேற்ற வேண்டி இருந்தது. பின்னர் சேற்றை அகற்றி ஆழத் தோண்ட வேண்டி இருந்தது" என்று அவர் சொன்னார்.
இந்தப் புதையல் வேட்டைக்கு எவ்வளவு செலவாகியது என்பது பற்றி இன்னமும் கணக்கிட வில்லை என்று அவர் கூறினார்.
இதுவரையில் புதையல் பற்றித் தடயமே ஏதும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
13.8.1976: No trace of treasure in Jaigarh Fort.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.