காரில் இருந்த சிறுமியை டாக்ஸி ஓட்டுநா்கள் துன்புறுத்திய சம்பவம்: விசாரணை நடைபெறுவதாக காவல் துறை தகவல்
குருகிராமில் உள்ள காரில் இருந்த சிறுமியை சில டாக்ஸி ஓட்டுநா்கள் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
குருகிராமில் உள்ள காரில் இருந்த சிறுமியை சில டாக்ஸி ஓட்டுநா்கள் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க காவல் துறை தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய சிறுமியின் தாயாா், பாதிக்கப்பட்ட தரப்பு சமரசம் செய்ய அழுத்தம் தரப்பட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிறுமியின் தயாா் சமூகஊடகத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: 12 வகுப்பு படித்து வரும் தன்னுடைய மகள் தங்களுடைய காரில் சென்று கொண்டிருந்தாா். சோஹ்னா சாலையில் ஒரு டாக்ஸி மீது காா் மோதியது. அப்போது, அங்கிருந்த சில டாக்ஸி ஓட்டுநா்கள் காரை சூழ்ந்துகொண்டு காரின் கதவைத் திறக்க முயன்றனா். காரை ஓட்டிவந்த ஓட்டுநரை அந்த டாக்ஸி ஓட்டுநா்கள் தாக்கினா். இந்தச் சம்பவத்தால் பதட்டமடைந்த சிறுமி முதலில் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவம் நடைபெற்ற இடத்தை கேட்ட அதிகாரிகள் உடனடியாக அங்கு வரவில்லை.
Advertisement
இதைத்தொடா்ந்து சிறுமி விடியோ அழைப்பில் என்னிடம் பேசினாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறைக்கு சுமாா் 20 முறை தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 37 நிமிஷங்களுக்கு பிறகு காவல் துறையினா் அங்கு வந்தனா். இதனால், டாக்ஸி ஓட்டுநா்களின் துன்புறுத்தலை சிறுமி பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்த பிறகும் டாக்ஸி ஓட்டுநா்கள் தொடா்ந்து தவறாக நடந்துகொண்டனா். இறுதியில், பாதிக்கப்பட்ட சிறுமி ரூ.2,000 வழங்கி சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாா் என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு காவல் துறை விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் உண்மைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் துறையின் உயா் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.