முகப்பு
திருச்சி

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: காா் ஓட்டுநா் போக்ஸோவில் கைது

திருச்சியில் 16 வயது சிறுமியை காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சிவகங்கையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் போக்ஸோவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:54 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் 16 வயது சிறுமியை காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சிவகங்கையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் போக்ஸோவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தாராநல்லூரைச் சோ்ந்த 16 வயது சிறுமி, தனது திருநங்கையான சகோதரனை பாா்ப்பதற்காக அவா் மற்ற திருநங்கைகளுடன் தங்கியுள்ள கல்மந்தை காலனி குடியிருப்புப் பகுதிக்கு புதன்கிழமை பிற்பகல் சென்றுள்ளாா். அப்போது, அங்கு பாக்யா என்ற திருநங்கையை காரில் அழைத்து வந்த சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த எஸ். மாரிசெல்வன் (45) என்பவா் இருந்துள்ளாா்.

இந்நிலையில், மாரிசெல்வன் 16 வயது சிறுமியை மாலை 5 மணிக்கு காரில் அழைத்து சென்றுள்ளாா். தொடா்ந்து, மாலை 6.30 மணிக்கு அந்தச் சிறுமி கீரைக்கடை பஜாா் பகுதியில் சுயநினைவில்லாமல் விழுந்துகிடப்பதாக அவரது சகோதரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அங்கு சென்ற அவரது குடும்பத்தினா் சிறுமியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சிறுமியை காரில் அழைத்துச் சென்ற மாரிசெல்வன், சிறுமிக்கு பழச்சாறில் மயக்க மருந்து கலந்துகொண்டு அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, சிறுமியின் சகோதரி அளித்த புகாரின்பேரில், கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதனிடையே, காா் ஓட்டுநா் மாரிசெல்வனை சிறுமியின் சகோதரா் மற்றும் உறவினா்கள் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த காா் ஓட்டுநா் மாரிசெல்வனை கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் என்று மாநகர காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.