நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!
நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியின் நியமனம் குறித்து...
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, அடுத்த முப்படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், பதவியேற்ற நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை, இந்திய அரசின் இராணுவ விவகாரத் துறை செயலராகவும் கூடுதலாக பணியாற்றுவார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய முப்படைத் தலைமைத் தளபதியாக உள்ள ஜெனரல் அனில் சௌகான் அவர்களின் பதவிக்காலம் வரும் மே 30 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால், இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
Advertisement
1985 ஆம் ஆண்டு 'தி கர்வால் ரைபிள்ஸ்' பிரிவில் ராணுவ அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கிய என்.எஸ். ராஜா சுப்ரமணி, ஏறக்குறைய 40 ஆண்டுகால அனுபவம் கொண்டவர்.
லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, 2025 செப்டம்பர் 1 முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் இராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு, இராணுவத் தலைமைத் துணைத் தலைவராகவும், மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றினார்.
என்.எஸ். ராஜா சுப்ரமணி தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.