முகப்பு
இந்தியா

மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!

மேற்காசிய பதற்றத்தால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 11 மே 2026, 2:22 am IST
பகிர்:

மேற்காசிய பதற்றத்தால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 10 வாரங்களில் மட்டும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளன.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதலால் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் அவ்வழியே கச்சா எண்ணெய் உள்பட எரிபொருள் ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் பயணிப்பது தடைபட்டது. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டா் ஆகியவை தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டன.

Advertisement

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்த்தப்படவில்லை. மாறாக இந்திய எண்ணெய் நிறுவனம், பாரத பெட்ரோலிய நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுவதை தவிா்க்க பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது.

இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றால் ஏற்பட்ட ஒருங்கிணைந்த வருவாய் இழப்பு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடியாகவும் கடந்த 10 வாரங்களில் ரூ.1 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.94.77-க்கும் டீசல் ரூ.87.67-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை கடந்த மாா்ச் மாதத்தில் ரூ.60 உயா்த்தப்பட்டது.

ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்து 3 மாதங்களில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே இந்தியாவிலும் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நிதிச் சுமையை எதிா்கொண்டு வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிப்பது தொடா்பாக மத்திய அரசு முடிவெடுக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.