நீட் மறுதேர்வு: வினாத்தாள் கசியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? - அகிலேஷ் யாதவ்
நீட் மறுதேர்வில் வினாத்தாள் கசியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...
நீட் மறுதேர்வில் வினாத்தாள் கசியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் வந்தன.
அதாவது, நீட் தேர்வில் கேட்கப்பட்ட 720 மதிப்பெண்களில், ஏறக்குறைய 600 மதிப்பெண்களுக்குரிய கேள்விகள், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தான் மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா-விடை வங்கியில் இடம்பெற்றிருந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகின்றது.
Advertisement
இந்த நிலையில், மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை இன்று (மே 12) அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:
”நீட் தேர்வு இரண்டாவது முறையாக நடத்தப்பட்டாலும், அதில் வினாத்தாள் கசியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
இந்தச் செய்தி, பாஜகவின் ஊழல் நிறைந்த அமைப்புக்கு எதிராக, கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடையே பெரும் கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் நிறைந்த பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் வரை, வினாத்தாள்கள் தொடர்ந்து கசிந்து கொண்டேதான் இருக்கும். பாஜக ஆட்சியை விட்டு நீங்கினால் மட்டுமே தேர்வுகள் முறையாக நடைபெறும். பாஜக அரசு என்பது தோல்வியடைந்த அரசு ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.