தில்லி: பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! ஓட்டுநர், நடத்துநர் கைது!
தில்லியில் நிகழ்ந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஓட்டுநர், நடத்துநர் கைது செய்யப்பட்டது குறித்து...
தில்லியில் பேருந்துக்குள்ளேயே ஒரு பெண்ணை ஓட்டுநரும் நடத்துநரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் மே 11 ஆம் தேதி இரவு நடைபெற்றதாகவும் அதில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இதுதொடர்பாக தில்லி காவல்துறை சார்பில் அதிகாரபூர்வமாக செய்திகள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சி, இந்தச் சம்பவத்தை 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ’நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை - கொலை’ சம்பவத்தோடு ஒப்பிட்டு, இது ஒரு "பெரும் அவமானம்" என்று தெரிவித்துள்ளது.
Advertisement
காவல்துறை தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண் ஒரு தொழிற்சாலையில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சரஸ்வதி விஹாரில் உள்ள பி-பிளாக் பேருந்து நிலையம் அருகே அவர் சென்றபோது, பேருந்தின் கதவருகே குற்றவாளிகளில் ஒருவர் நிற்பதைக் கண்டு அவரிடம் நேரத்தைக் கேட்டார். அதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அந்தப் பெண்ணை பேருந்தினுள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மே 12 ஆம் தேதி, ராணி பாக் காவல் நிலையத்தில் சில குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை சார்பில் அதிகாரபூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.