அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு...
அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் முன்னதாகவே கசிந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அவருக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
Advertisement
இந்த நிலையில், ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
”மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாளில் இருந்த கேள்விகளும் சில மாணவர்களிடம் இருந்த மாதிரி வினாத்தாளில் இருந்த கேள்விகளும் ஒரே மாதிரி இருப்பதாக புகார் வந்தது. இதுதொடர்பான விசாரணையை மத்திய முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. மே 12 ஆம் தேதியே வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டது.
மோசடி செய்பவர்களால் எந்தவொரு மாணவரும் தங்கள் உரிமைகளை இழக்கக்கூடாது என்பதற்காக தேர்வை ரத்து செய்ய முடிவெடுத்தோம். முறைகேடுகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். இந்த விவகாரத்தில் மிக ஆழமான விசாரணையை சிபிஐ மேற்கொள்ளும்.
இனி நீட் தேர்வில் முறைகேடு நடைபெறாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். வினாத்தாள் கசிவுக்கு முடிவுகட்ட அடுத்தாண்டு முதல் பிரத்யேக தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நீட் நடத்தப்படும்.” எனத் தெரிவித்தார்.