கேரளத்தில் டிரெண்டாகும் முதல்வர் வி.டி. சதீசனின் சிரிப்பு!
கேரளத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள வி.டி. சதீசனின் சிரிப்பு வைரலாகி வருவது குறித்து...
கேரளத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள வி.டி. சதீசன், செய்தியாளர் சந்திப்பின்போது கேமராவை நோக்கி செய்த புன்னகை சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
செய்தியாளர் சந்திப்பை இறுக்கமாக எதிர்கொள்ளாமல், கேள்வி எழுப்பும் செய்தியாளர்களுக்கு சிரித்தவாறு பதில் அளிப்பதாகவும், பதட்டப்படாத மிகவும் 'கூலான' முதல்வர், எங்களின் முதல்வர் என கேரள மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி. சதீசன் இன்று (மே 18) பொறுப்பேற்றுக்கொண்டார்.
Advertisement
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 20 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
பதவியேற்றதும் கேரள மாநில தலைமைச் செயலகத்துக்குச் சென்ற முதல்வர் வி.டி. சதீசன், தனது அலுவலகப் பணிகளைத் தொடங்கினார். இத்துடன், முதல்வர் சதீசன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் முக்கியமான 3 திட்டங்களை அவர் அறிவித்தார்.
1. சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தில் ரூ. 3000 உயர்த்தப்பட்டுள்ளன.
2. அங்கன்வாடிப் பணியாளர்கள், சமையல் பணியாளர்கள், மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
3. அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என மூன்று திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின்போது திட்டங்கள் குறித்து வி.டி. சதீசன் பேசினார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
கேள்விகளுக்கு பதில் அளித்த பிறகு கேமராவை நோக்கி பகடி செய்யும் வகையில் சிரித்தார். அவரின் இந்த புன்னகை அழுத்தமாக செய்தியாளர் சந்திப்பை அணுகாமல், தன்னம்பிக்கையுடனும் நிதானத்துடனும் முதல்வர் இருப்பதை உணர்த்துவதாக இன்ஸ்டாகிராமில் இந்த விடியோவைப் பகிர்ந்து பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.