50 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாங்கிய நிலம்! 11 மடங்கு விலை உயர்ந்தது எப்படி?
அரசுத் திட்டங்களை முன்கூட்டியே அறிந்து அந்த இடத்திற்கு அருகில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதலீடு செய்தனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 2022 ஆம் ஆண்டு வாங்கிய நிலம், நெடுஞ்சாலைத் திட்ட அறிவிப்பால் 2 ஆண்டுகள் கழித்து 11 மடங்கு விலை உயர்ந்துள்ளது.
போபால் அருகே உள்ள விவசாய நிலத்தில் ரூ. 5.5 கோடிக்கு அவர்கள் முதலீடு செய்த நிலையில், தற்போது 11 மடங்கு அதிகரித்து அதன் தற்போதைய மதிப்பு ரூ. 60 கோடியாக அதிகரித்துள்ளது.
அரசாங்க திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, உயர்நிலை அளவில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் துறைவாரியாக நடைபெறும். அந்தவகையில் முன்கூட்டியே விவசாய நிலத்தில் நெடுஞ்சாலை வருவதை அறிந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அந்த நிலத்தை வாங்கியுள்ளனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Advertisement
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகேவுள்ள கோலார் கிராமத்தில் 50 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்து 2.023 ஹெக்டர், அதாவது 5 ஏக்கர் நிலத்தை ரூ. 5.5 கோடிக்கு வாங்கியுள்ளனர். மத்தியப் பிரதேசம் மட்டுமின்றி, மகாராஷ்டிரம், தெலங்கானா, ஹரியாணா மற்றும் தில்லியைச் சேர்ந்த அதிகாரிகளும் நிலம் வாங்கியுள்ளனர்.
நிலம் வாங்கிய 16 மாதங்களில், போபால் வழியாக நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு 2023 ஆகட்ஸ் மாதத்தில் மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் மதிப்பு ரூ. 3,200 கோடி.
இந்தத் திட்டம் அதிகாரிகள் வாங்கிய நிலத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. விவசாய நிலமாக இருந்த இந்தப் பகுதி, நெடுஞ்சாலை அறிவிப்புக்குப் பிறகு குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
விவசாய நிலமாக இருந்தபோது குறைந்த விலைக்கு வாங்கிய நிலையில், நெடுஞ்சாலை வருவதால், அதன் அருகேவுள்ள பகுதிகள் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதுவும் அதிகாரிகள் வாங்கிய இடத்தை பாதிக்காத வகையில் 500 மீட்டர் தொலைவில் சாலை வருகிறது.
விவசாய நிலம் குடியிருப்பு நிலமாக வகைப்படுத்தப்பட்ட பிறகும், இதுவரை அப்பகுதியில் எந்தவொரு வீட்டுவசதி வாரிய சங்கமும் விரிவாக்கம் செய்யப்படவில்லை.
2022 ஏப்ரல் 4 ஆம் தேதியில் 2.023 ஹெக்டர் நிலம் ஒரே பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் பங்குதாரர்களாக 50 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரூ. 5.5 கோடிக்கு நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 7.78 கோடியாக இருந்துள்ளது.
2022-ல் ஒரு சதுர அடி ரூ. 81 ஆக இருந்த நிலையில், 16 மாதங்கள் கழித்து 2023 ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்த நிலத்தின் மதிப்பு 11 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு சதுர அடி ரூ. 81 ஆக இருந்த நிலையில், 16 மாதங்கள் கழித்து ஒரு சதுர அடி ரூ. 557 ஆக அதிகரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் தற்போதைய மதிப்பு ஒரு சதுர அடி ரூ. 2500 முதல் 3000 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.