மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!
மத்திய பிரதேசத்திலிருந்து பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அழைத்து வரப்பட்டனர்.
போபால் : மத்திய பிரதேசத்திலிருந்து பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அழைத்து வரப்பட்டனர்.
மாநிலங்களவைத் தோ்தல் வரும் ஜூன் 18-இல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் 230 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 164 பாஜக எம்எல்ஏக்கள், 64 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனா்.
இதனால் தற்போதைய மாநிலங்களவைத் தோ்தலில் இரண்டு இடங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எஞ்சிய ஓரிடத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், அந்த இடத்துக்கு பாஜக போட்டியிடாது என்றும் கருதப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் பிரதிநிதித்துவமுள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்குமான வேட்பாளர்களை பாஜக களமிறக்கி அதிர்ச்சியளித்துள்ளது. பாஜக சாா்பில் தருண் சுக், ரஜ்னீஷ் அகா்வால், மகேஷ் கேவட் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
மூன்றாவது இடத்துக்கு பாஜக சார்பில் மகேஷ் கேவட்டை களமிறக்கியதன் மூலம், எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கும் சூழல் ஏற்படக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு செலுத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கையாக மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மொத்தமுள்ள 62 பேரில் முதல்கட்டமாக 35 பேர் தங்கள் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) சிறப்பு விமானத்தில் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.