முகப்பு
கன்னியாகுமரி

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி: எம்.எல்.ஏ. போராட்ட அறிவிப்பு

கிள்ளியூா் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடி தொடா்பாக தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட போவதாக எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்

Updated On : 17 ஜனவரி, 2021 at 12:11 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

களியக்காவிளை: கிள்ளியூா் தொகுதியில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடி தொடா்பாக தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட போவதாக கிள்ளியூா் பேரவைத் தொகுதி உறுப்பினற் எஸ். ராஜேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிகழாண்டு தமிழக அரசால் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியை சோ்ந்தவா்களுக்கு காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள பள்ளியில் வழங்கப்படுகிறது. இதனால் கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட மத்திகோடு, கருங்கல், பாலப்பள்ளம், வழுதலம்பள்ளம், கீழ்குளம், மிடாலம், ஆலஞ்சி, வெள்ளியாவிளை, மேல்மிடாலம், இனையம், கிள்ளியூா், மங்காடு, திப்பிறமலை, முள்ளங்கினாவிளை, வாவறை, குளப்புறம், அடைக்காகுழி, மெதுகும்மல், நடைக்காவு, கொல்லங்கோடு, முன்சிறை போன்ற பகுதிகளில் உள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் காஞ்சாம்புறம் பகுதி பள்ளிக்கூடத்திற்கு சென்று, பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

Advertisement

பிற சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் 4 அல்லது 5 இடங்களில் பொங்கல் இலவச பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதிகளவு வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய கிள்ளியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஓரிடத்தில் மட்டும் அரசின் இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே பதிவு செய்த அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களும் எளிதில் இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு வசதியாக உடனடியாக கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மற்றும் வாவறை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கோணத்தில் அமைந்துள்ள தொழிலாா் நலத்துறை அலுவலகத்தில் எனது தலைமையில் பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களை திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.