சேலம், செப். 13: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள சென்னகிரியைச் சேர்ந்தவர் ம.திருமுருகன் (23), விசைத்தறித் தொழிலாளி. இவர் கடந்த 3-ம் தேதி சென்னகிரியில் இருந்து ஆட்டையாம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சைக்கிளில் சென்ற செந்தில் என்பவரது மகனும் மாணவருமான விக்னேஷ் (12) மீது மோதியுள்ளார்.
இது குறித்து விக்னேஷின் தந்தை செந்தில் ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலனிடம் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய பூபாலன், பைக்கில் சென்று மோதியதாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்படி திருமுருகனிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து திருமுருகன் ஆயிரம் ரூபாயை உடனடியாகக் கொடுத்துள்ளார். மேலும் ரூ.4 ஆயிரத்தைக் கேட்டு பூபாலன் அடிக்கடி தொந்தரவு அளித்து வந்தாராம். இருப்பினும் மேலும் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுக்க விரும்பாத திருமுருகன், இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சந்திரமௌலியிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரையின்படி இன்று மாலை காவல் நிலையம் சென்ற திருமுருகன், இன்ஸ்பெக்டர் பூபாலனிடம் லஞ்சப் பணம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது திடீரென காவல் நிலையத்துக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், பூபாலனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.