பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கு வாபஸ்
காசோலை மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட்
காசோலை மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், தான் வாங்கியிருந்த கடன் தொகை ரூ.2 லட்சத்தை திங்கள்கிழமை வட்டியுடன் அவர் திருப்பியளித்தார். இதையடுத்து, கடன் கொடுத்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.
இவர் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் பொன்னுசாமியிடம் 2008-ஆம் ஆண்டு ரூ.2 லட்சம் கடன் பெற்றாராம் அந்தப் பணத்துக்காக 2009-ஆம் ஆண்டு, தொடக்கத்தில் காசோலை அளித்தாராம்.
Advertisement
பவர் ஸ்டார் சீனிவாசன் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் அந்தக் காசோலை திரும்பியது.
இதையடுத்து, பொன்னுசாமியின் மேலாளர் வெங்கடாசலம் பவர் ஆஃப் அட்டர்னி பெற்று நாமக்கல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், 2009ஆம் ஆண்டு இறுதியில் சீனிவாசனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பிறகு அவர் தலைமறைவானார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சீனிவாசனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஜோதி உத்தரவு பிறப்பித்தார். இதனடிப்படையில், நாமக்கல் போலீஸார் அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சீனிவாசனின் வழக்குரைஞர் ரூ. 2 லட்சம் தொகையை வட்டியுடன் பொன்னுசாமியிடம் திங்கள்கிழமை திருப்பியளித்தார்.
இதையடுத்து பொன்னுசாமி தரப்பில் வெங்கடாசலம் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதாக அவரது வழக்குரைஞர் கிருஷ்ணன் தெரிவித்தார்.