முகப்பு
தற்போதைய செய்திகள்

நிர்வாக வசதிக்காக தமிழகத்தை 2 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும்: இரா.அன்பரசு

ஆந்திரா மாநிலத்தைப் பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க வேண்டுமென்று அம்மாநில மக்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். அதற்கு தீர்வு காணும் வகையில் "தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை வரவேற்கிறேன்.

Updated On : 1 ஆகஸ்ட் 2013, 8:05 pm IST
பகிர்:

நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இரா.அன்பரசு கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது,

ஆந்திரா மாநிலத்தை பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க வேண்டுமென்று அம்மாநில மக்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். அதற்கு தீர்வு காணும் வகையில் "தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை வரவேற்கிறேன்.

Advertisement

Advertisement

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 6 பெரிய மாநிலங்களும் 6 சிறிய மாநிலங்களும்தான் இருந்தன சுதந்திரம் அடைந்த பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இந்தியா வளர்ச்சி காண வேண்டுமானால் நிர்வாக வசதிக்காக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பெரிய மாநிலங்கள் இரண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டன. அதன்பிறகு மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டது அந்த அடிப்படையில்தான் சென்னை மாகாணம் கர்நாடக, கேரளா, ஆந்திரம், தமிழ்நாடு என்று நான்கு மாநிலங்களாக உருவானது.

இப்படி பிரிக்கப்படவில்லை என்றால் இன்றைக்கு பெரிய வளர்ச்சி கண்டிருக்காது. அதே போன்றுதான் தமிழகத்தில் ஆரம்பத்தில் 13 மாவட்டங்கள்தான் இருந்தன. நிர்வாக வசதிக்காக இன்றைக்கு 32 மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. இவை அனைத்தும், வளர்ச்சி, மக்கள்தொகை அடிப்படையில் செய்யப்பட்டவை. இந்தியாவில் மிகப்பெரிய மாநிலங்களாக இருப்பவை உத்திரப் பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடுதான்.

ஆந்திரா இப்பொழுது பிரிக்கப்பட்ட பிறகு இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. மக்கள்தொகை 7 கோடியே 20 லட்சமாகும், 234 சட்டமன்ற தொகுதிகள் 39 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. உத்திரபிரதேசத்திலிருந்து பார்த்தால் எல்லா வகையிலும் இப்பொழுது தமிழ்நாடு தான் பெரிய மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ளது.

மராட்டிய மாநிலத்தை இரண்டாக பிரித்து "விதர்பா" மாநிலமும், மேற்கு வங்காளத்தை பிரித்து "கூர்காலாந்து" என்றும் உத்திரபிரதேசத்தை பிரித்து "ஹரித் பிரதேசம்" என்றும் மாநிலங்களை பிரிக்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

உத்திரபிரதேசத்தை 4 மாநிலங்களாக கூட பிரிக்கலாம் என்று .மாயாவதி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தை பிரித்து "குடகு" மாநிலம் அமைக்க வேண்டும் என்றும் முன்பு கோரிக்கைகள் எழுந்தன. இவைகளை ஒப்பிடும்பொழுது நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரிக்கவேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். மூன்றாகக் கூடப் பிரித்தால் என்ன என்று தமிழக மக்களே ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்கும் நிலை எதிர்காலத்தில் வரும்.

தமிழகத்திற்கு சென்னை தலைநகரமாக இருப்பதால் தென்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொழில், வேலைவாய்ப்பை முன்னிட்டு வடதமிழகத்தில் நெருக்கமாக வந்து குடியேறி விட்டார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாயநிலங்கள் குடியிருப்புகளாக மாறி விவசாயம் அடியோடு பாதிப்பு இடநெருக்கடி நிர்வாக திறன், நேரமின்மை, குறிப்பாக ஒருபக்கம் வளர்ச்சி, ஒருபக்கம் தொய்வு என்ற நிலை உருவாகியுள்ளது.

வட தமிழகத்தில் மக்கள் பெருக்கத்தால்தான் சட்டமன்ற தொகுதிகள் தென்மாவட்டங்கள் குறைந்து வடதமிழகத்தில் கூடுதலாக தொகுதிகள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லபோனால் போக்குவரத்து, காலவிரயத்தை கருத்தில் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றக் கிளை மதுரையில் தொடங்கப்பட்டது. இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சீரான வளர்ச்சி காணவும் சிறிய மாநிலம் சிறந்த நிர்வாகம் என்கிற அடிப்படையில் திருச்சி காவேரிக் கரையை மையமாக வைத்து தமிழகத்தை இரண்டாகப் பிரித்து சென்னையை தலைநகரமாகக் கொண்டு "வடதமிழகம்" என்றும் மதுரையை தலைநகரமாகக் கொண்டு "தென்தமிழகம்" அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன்.

இரண்டு மாநிலங்களாகப் பிரிப்பதன் மூலம் மத்திய அரசினுடைய நிதி ஆதாரங்கள் கூடுதலாக கிடைப்பதோடு திட்டங்களும் அதிகளவில் வரும். இதன் மூலம் தமிழக மக்கள் பயனடைவார்கள். இதே கோரிக்கையை முன்பு மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் சேதுராமன், இறைவன் போன்றவர்கள் வைத்தனர்.

குறிப்பாக தென்மாநில மக்கள் இந்தக் கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் காரணம் அவர்களுக்குதான் அதிகம் சிரமம் உள்ளது. தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு இயற்கையாகவே எல்லைக்கோடாக திருச்சி காவிரிக்கரை அமைந்துள்ளது எனவே எந்த பாகுபாடும் இன்றி இரண்டாகப் பிரிக்கலாம்.

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தி "மாநிலப் பிரிவு மக்கள் இயக்கம்" ஒன்றை நடத்தவுள்ளோம். முதலில் கையெழுத்து இயக்கம், இது தொடர்பாக டெல்லிக்கு குழுவாகச் சென்று சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் மற்ற அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். புதுவைக்கும் மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

- என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments