விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்காததால் அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், கச்சேரிதளவாய்புரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் பாலமுருகன் (27). இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தாரம்.சாமிநத்தம் என்ற இடத்தில் சென்றபோது, பஸ் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த பாலமுருகன் உயிரிழந்தார். இதையெடுத்து, உயிரிழந்த பாலமுருகனின் குடும்பத்தார் விபத்துக்கான நஷ்டஈடு வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகனின் குடும்பத்தாருக்கு 9.37 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என அரசுபோக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவி்ட்டார். இருப்பினும், விபத்துக்கான நஷ்டஈடு வழங்கப்படாததால் பாலமுருகனின் குடும்பத்தால் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும்முறையிட்டனர்.
இதையெடுத்து, அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு நீதிபதி ஜெ.பிரபுதாஸ் உத்தரவிட்டார். இந்த உத்தரவுப்படி, தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புளியம்பட்டிக்கு செல்ல தயாராக நின்ற அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஜப்தி செய்தனர். இதே போல, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷானவாஸ் என்பவர் அரசு பஸ்சில் சென்றபோது விபத்தில் காயமடைந்தார். அவருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாததால் தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணவள்ளி அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில்,நீதிமன்ற ஊழியர்கள் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.