கடலூர் பகுதியில் வாழைத்தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, கிராம மக்கள் பீதியடைந்ததையடுத்து, வனத்துறையினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் அருகே அடர்ந்த முந்திரி காடுகளுடன் மலை பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 30 கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கண்ணாரப்பேட்டையில் இருந்து வழிசோதனைப்பாளையம் செல்லும் போது சாலையில் சிறுத்தை குறுக்கிட்டதாக லாரி ஓட்டுநர் அப்பகுதி கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து கிராம மக்கள் முந்திரி காடுகள், வாழை தோப்புகள் பகுதியில் ஆயுதங்களுடன் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய சென்றனர். ஆனால் சிறுத்தை நடமாட்டத்தை போன்று கால்தடத்தை மட்டும் கண்ட மக்கள் மீண்டும் கிராமத்திற்கு திரும்பினர்.
இந்நிலையில் வனச்சரகர்கள் சுந்தரபாண்டி, ஆறுமுகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை கிராம மக்கள் குறிப்பிட்ட வழிசோதனைப்பாளையம் வாழைத்தோப்பில் உள்ள கால்தடத்தை ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் சிறுத்தைகளுகள் இருந்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆய்வு செய்யப்பட்ட கால்தடம் சிறுத்தைக்கானது இல்லை. இருப்பினும் இப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றனர்.
இதுகுறித்து வழிசோதனைப்பாளையம் கிராம மக்களிடம் கேட்டபோது, இப்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்ட அதே பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு சிறுத்தை நடமாட்டம் இருந்தது. அப்போது கூண்டு வைத்து அந்த சிறுத்தை பிடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் குறித்த தகவலால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். கிராம மக்களின் பீதியை போக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.