லாலாப்பேட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.17 லட்சம் மோசடி செய்த, சங்கத்தின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள திம்மாட்சிபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு போலி ஆவணம் தயாரித்து சிலர் மோசடி செய்வதாக குளித்தலை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வங்கியில் கணக்கினை ஆய்வு செய்த போது, 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை, வங்கியில் போலி ஆவணம் தயாரித்து நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் இருப்பதாகக் கூறி கடனும், ஏற்கனவே கடன் வழங்கியவருக்கு மீண்டு கடன் கொடுத்தது உள்ளிட்டவைத் தொடர்பாக ரூ.2லட்சத்து 17 ஆயிரத்து 69 மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இந்த மோசடியை வங்கியின் முன்னாள் செயலாளர் வாங்கலைச் சேர்ந்த கார்த்திக்(31), உறுப்பினர்கள் குளித்தலை ஐநூற்றிமங்கலம் கே.பேட்டையைச் சேர்ந்த சந்திரமோகன்(50), வீரவள்ளியைச் சேர்ந்த விஸ்வநாதன்(51), மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் சரக மேற்பார்வையாளர் நச்சலூரைச் சேர்ந்த சிதம்பரம்(60) மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி தாத்தையாங்கர்பேட்டை பிள்ளாத்துறையைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஆர்.பாலசுப்ரமணியன்(60) ஆகியோர் சேர்ந்து இந்த முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பாலமுருகன் சேலம் வணிக குற்றப்புலனாய்வு போலீஸில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் கரூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் போலீஸார் சனிக்கிழமை இரவு கார்த்திக் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து, குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.