விருதுநகரில் மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு எதுவும் இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விநியோகம் செய்ததாக கடைக்காரர்கள் 8 பேரை சனிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில், மருந்தகங்களில் டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரை வழங்குகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் 10 குழுக்கள் அமைத்து ராஜபாளையம், விருதுநகர், காரியாபட்டி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியிலும் செயல்பட்டு வரும் மருந்தகங்களில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அதில், டாக்டர்களின் பரிந்துரைச்சீட்டின்றி மருந்து மாத்திரைகளை வழங்கியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட கத்தாளம்பட்டியைச் சேர்ந்த பொன்ராஜ்(53), பர்மாகாலனியைச் சேர்ந்த சாகுல்ஹமீது(40) மற்றும் இப்ராஹீம் பாரூக்(35) ஆகியோரும்,
ஆமத்தூர் காவல் நிலையத்திற்குள்பட்ட செங்கோட்டை சரவணன்(23), மத்தியசேனையைச் சேர்ந்த இளையராஜா(35), சிவரக்கோட்டை பால்பரந்தாமன்(45), வத்தக்காரப்பட்டி காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மருந்து மாத்திரைகளை வீடுகளில் வைத்து விற்பனை செய்ததாக ஆவுடையாபுரம் நடராஜன்(70), ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த சூபிரியல்கான்(44) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.