விருதுநகர் 4 வழிச்சாலை பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் வத்தல் ஆலை தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த முத்துராஜின் மகன் சுரேஷ்(42) மற்றும் பீகாரைச் சேர்ந்த தீபக் என்பவரின் மகன் பிரகாஷ்(41). இவர்கள் இருவரும் விருதுநகர் ரயில்வே பீடர் சாலை பகுதியில் உள்ள வத்தல் ஆலையில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இருவரும் இருசக்கர வாகனத்தில் சிவகாசி வரையில் சென்று விருதுநகர் நோக்கிச் 4 வழிச்சாலையில் வடமலைக்குறிச்சி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மதுரையில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து எதிர்பாரத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியதில் தொழிலாளர்கள் இருவரும் தூக்கி வீசியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது தொடர்பாக தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.