புதுதில்லி: கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வரும் இரண்டாவது கட்ட நடவடிக்கையை தற்போது வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக 60 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், நாடு முழுவதும் 5,400 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நவம்பர் 9-ம் தேதி முதல், கடந்த ஜனவரி 10-ம் தேதி வரை 1,100 ரெய்டுகள் வருமானவரித்துறையால் நடத்தப்பட்டுள்ளன. 5,100 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ரூ.513 கோடி பணம் மற்றும் ரூ.610 கோடி மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதில், ரூ.110 கோடி புதிய ரூபாய் நோட்டு மதிப்பிலானவை. குறிப்பாக, கரன்சி வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, கணக்கில் வராத ரூ.5,400 கோடியை வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தற்போது 60 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் அதிக அளவில் சொத்துகள் வாங்கியதில் வருமான வரித்துறை விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர். அவர்கள் உடனே பதில் அளிக்க வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.