திருப்பூர் அருகே உள்ள மாணிக்காபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் மழை நீருடன் சாயக்கழிவு நீரும் புதன்கிழமை கலந்தோடியது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சாய, சலவை மற்றும் பிரிண்டிங் ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக திருப்பூர் நொய்யல் ஆறும் சாயக்கழிவுநீர் இல்லாமல் பசுமையாகவே காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இந்த மழையை பயன்படுத்தி முறைகேடாக இயங்கும் சாய ஆலை ஆலைகள் சாயக்கழிவுநீரை நொய்யலில் திறந்து விட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் திருப்பூர் மாணிக்காபுரம் புதூர் பகுதியில் கருப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் ஓடியது. மேலும், பல பகுதிகளில் நுரையுடன் வெள்ளம் பாய்ந்தோடியது.
இது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், விதிகளை மீறி இயங்கி வரும் நிறுவனங்கள் மழையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கழிவு நீரை நொய்யலில் கலந்து விடுகின்றனர்.
ஆகவே, மழைக்காலங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீரைக் கலக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.