சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் மார்க்கங்களில் மதுரைக்கு இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஜூன் 24 ஆம் தேதி முதல் மதுரை மாவட்டம் முழுவதும் முழு அளவிலான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 23 ஆம் தேதி இரவு முதலே பல மார்க்கங்களிலிருந்தும் மதுரைக்குள் நுழையும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, சாயல்குடி மற்றும் இதனை சுற்றியுள்ள முக்கிய ஊர்களுக்கு மானாமதுரை, திருப்புவனம் மார்க்கங்களில் மதுரை சென்று திரும்பும் பேருந்துகள் அனைத்தும் மதுரைக்கு இயக்கப்படாது எனவும் இப் பேருந்துகள் திருப்புவனம் வரை மட்டுமே சென்று திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் புதன்கிழமை காலை முதல் ராமநாதபுரம் பரமக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து திருப்புவனத்துக்கு ஒருசில அரசு பேருந்துகள் மட்டும் இயங்கின. இதில் விரல்விட்டு எண்ணக்கூடிய பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். அதன்பின் நேரம் செல்லச்செல்ல மேற்கண்ட இடங்களிலிருந்து மானாமதுரை, திருப்புவனம் வழியாக திருப்புவனம் வரை கூட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால் மேற்கண்ட ஊர்களிலிருந்து மானாமதுரை, திருப்புவனம் வரும் பயணிகள் கூட வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதேபோல் சிவகங்கை, காளையார்கோயில் மார்க்கங்களிலிருந்து மதுரை செல்லும் பஸ்கள் திருப்புவனம் அருகே பூவந்தியுடன் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பூவந்தி வரை கூட எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை.
மதுரைக்கு பஸ்கள் இயக்கப்படாததால் மானாமதுரை பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. திருப்புவனத்திலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.