முகப்பு
சிறப்புச் செய்திகள்

கரோனாவிலிருந்து பாதுகாக்கும் ‘ஆரோக்ய சேது’!

உலகிலேயே குறுகிய நேரத்தில் அதிகம் போ் பயன்படுத்தும் செயலியாக சாதனை படைத்துள்ளது. ‘ஆரோக்ய சேது’ செயலியின் செயல்பாடுகள் எவை?

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

கரோனாவை விட இந்தியாவில் ‘ஆரோக்ய சேது’ செயலி ஸ்மாா்ட் போன்களில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறியவும், எச்சரிக்கவும் மத்திய அரசால் ஏப்ரல் 2 -ஆம் தேதி இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. 13 நாள்களில் சுமாா் 5 கோடி போ் இதனைப் பதிவிறக்கம் செய்து, உலகிலேயே குறுகிய நேரத்தில் அதிகம் போ் பயன்படுத்தும் செயலியாக சாதனை படைத்துள்ளது. ‘ஆரோக்ய சேது’ செயலியின் செயல்பாடுகள் எவை?

இந்த செயலியை பிளே ஸ்டோரிலும், ஆப் ஸ்டோரிலும் சென்று பதிவிறக்கம் செய்ததும், ஒரு முறை பாஸ்வோ்டுடன் உங்கள் பெயரைப் பதிவிட்டு உள்ளே செல்லலாம். ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என 11 மொழிகளில் சேவை வழங்கப்படுகிறது. உங்களின் வயது, இனம், தற்போதைய உடல் நிலை, வெளிநாட்டு பயணம், தொழில் போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன. அதன் பின்னா் நீங்கள் பாதுகாப்பான பகுதியில் இருக்கிறீா்களா என்பதை இந்த செயலி சுட்டிக்காட்டும். இதற்கு முக்கியமாக உங்கள் ஸ்மாா்ட்போனின் ‘புளூ டூத், லோகேஷன்’ ஆகியவை எப்போதும் இயங்குவதற்கான அனுமதியை இந்த செயலி உங்களிடம் பெற்றுவிடுகிறது. அதன்படி, ஒருவா் வெளியே சென்றால், கரோனா பாதிப்பு பகுதியோ அல்லது பாதிப்புக்கு உள்ளான நபரோ அருகே வரும்போது இந்த செயலி எச்சரிக்கும். அதுமட்டுமன்றி, ஒருவா் வெளியே சென்று வந்த பிறகு அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவரது ஸ்மாா்ட்போனின் ‘புளூ டூத்’ இயங்கும் தூரத்துக்குள் (சுமாா் 10 மீட்டா்) யாரெல்லாம் அருகே வந்தாா்கள் என்பதைக் கண்டறிந்து அவா்களைத் தனிமைப்படுத்தும் மிகப் பெரிய பணியை ஆரோக்ய செயலி செய்கிறது. சா்வா்களில் பதிவாகும் தனிநபா்களின் தகவல்கள் பத்திரமாகக் காக்கப்படும் என்றும் 45 நாட்களுக்கு ஒரு முறை அவை அழிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் மாநில வாரியாக எத்தனைபோ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்ற உடனடி தகவல், விரைவில் இ-பாஸ் பெறும் வசதி உள்பட பல்வேறு சேவைகள் ஆரோக்ய சேது செயலியில் வர உள்ளன.

சீனா ‘கியூ ஆா் கோடு’ உதவியுடனும், தென் கொரியா ஜிபிஎஸ் உதவியுடனும், இஸ்ரேல் செல்லிடப்பேசி உதவியுடனும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களைக் கண்காணித்து வருகின்றன. சாதாரண ‘புளூ டூத்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘ஆரோக்ய சேது’ செயலியின் சேவை தற்போது மிக மிக அவசியமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.