பவானி: அந்தியூர் அருகே வெவ்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட பாம்புகள் வறட்டுப்பள்ளம் அணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டது.
அந்தியூரை அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன் மனைவி வெங்கட்டம்மாள். இவரது வீட்டுக்கு அருகாமையில் பாம்பு மறைந்திருப்பதாக அந்தியூர் வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், வேட்டைதடுப்புக் காவலர்கள் தர்மலிங்கம், ஆனந்த் ஆகியோர் விரைந்து சென்றனர். அங்கு, புதருக்குள் மறைந்திருந்த கண்ணாடி விரியன் பாம்பினைப் பாதுகாப்புடன் பிடித்தனர்.
இதனையடுத்து அந்தியூர் புதுப்பாளையம், வெள்ளைப்பிள்ளையார் கோயிலைச் சேர்ந்த மணிகண்டன், தனது வீட்டில் வளர்க்கும் கோழிக்காக அமைத்திருந்த கூண்டில் பாம்பு புகுந்திருப்பதைக் கண்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த இருவரும் கோழிக் கூண்டில் பதுங்கியிருந்த நாகப்பாம்பினை உயிருடன் பிடித்தனர். இதைத் தொடர்ந்து, இரு பாம்புகளும் அந்தியூரை அடுத்த வறட்டுப்பள்ளம் அணை பகுதியில் பாதுகாப்புடன் விடுவிக்கப்பட்டது.