தருமபுரியில் பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் உள்பட 5 பேருக்கு கரோனா
தருமபுரி மாவட்டத்தில் அரசு அதிகாரி உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அனைவரும் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி: தருமபுரி மாவட்டத்தில் அரசு அலுவலர் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அனைவரும் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி பிடமனேரி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர். இவர் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநராக (தேர்வுகள் துறை) சென்னையில் பணியாற்றி வருகிறார். இவர் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
வழக்கம்போல கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குடும்பத்தினரை காண தருமபுரிக்கு வந்தார். அப்போது அவரது உடல்நிலையில் சில மாறுபாடுகள் தென்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
இதில் அவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4 நபர்கள் அனுமதி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த 1 பெண் உள்ளிட்ட 4 நபர்கள் மகாராஷ்ட்ர மாநிலம், மும்பையில் இருந்து சிறப்பு ரயிலில் சேலம் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவருக்கும் சேலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவர்கள் அனைவரையும் சேலத்தில் இருந்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு, கரோனா சிகிச்சை பிரிவில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.