ஔரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதியில் கரோனாவால் இதுவரை 1,504 குழந்தைகள் தங்கள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தொற்று நோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கண்டறிய மாநில அரசு ஒரு கணக்கெடுப்பு குழுவுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஆஷா தொழிலாளர்கள், உள்ளாட்சி நிர்வாக குழுக்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
"ஜூன் 7 ஆம் தேதி நிலவரப்படி, மராத்வாடாவில் 1,504 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர். இதில் 181 குழந்தைகள் தாயை இழந்த நிலையில் 1,296 பேர் தந்தையை இழந்துள்ளனர்" என்று பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை ஆணையர் ஹர்ஷா தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய் தொற்றால் குறைந்தது 27 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்து தவிக்கின்ற நிலையில், இதுபோன்ற தகவல்களைத் தெரிவிக்க 1098 ஹெல்ப்லைன் எண்ணை அழைக்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
வரும் காலத்தில் குறைந்தது 1,358 குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் என்ற நிலையில், இவர்களை வெவ்வேறு அரசாங்க திட்டங்களில் இணைக்கவும் முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.