சங்ககிரி: சேலம் மாவட்டம், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் எரிபொருள்களின் விலையினை மத்திய அரசு திரும்பபெறக்கோரி சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல், டீசல் விற்பனையகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.ஜெய்க்குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து மத்திய அரசு தினசரி உயர்த்தி வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் இதனை சார்ந்துள்ள லாரி தொழில் மிகவும் நசிவடைந்து வருகின்றன. அதனை நம்பியுள்ள பல்லாயிரகணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். எனவே அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எரிபொருள்களின் விலை உயர்வினை மத்தியரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.
முன்னாள் மாவட்ட பொதுச்செயலர்கள் பிபி.சுப்பிரமணியன், செங்கோட்டுவேல், முன்னாள் மாநில துணை செயலர் நடராஜ், முன்னாள் நகரத்தலைவர் காசிலிங்கம், நகரச்செயலர் எ.ரவி, நிர்வாகிகள் அங்கமுத்து, செல்வராஜ், சரவணன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி விஸ்வநாதன், கார்த்தி, குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.