சூரி, வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் என ‘கொட்டுக்காளி’ படத்துக்கு இயக்குநர் பாலா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், நம்முடைய தமிழ் திரைப்படத்துறையில் இருந்து உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று இந்தக் கொட்டுக்காளி.
ஆழமான இக்கதையை, எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் வினோத்ராஜ்.
குறிப்பாக சூரி தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்து நடிப்பை வெளிப்படுத்தி ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில் மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி, அன்னா பென்.
படத்தில் நடித்திருக்கும் அனைவருமே, தாங்களும் ஒரு முக்கியக் கதாபாத்திரம் தான் என்று சவால்விட்டிருக்கிறார்கள்.
காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல், மிகவும் போற்றுதலுக்குரியவர்.
சிவகார்த்திகேயனுக்கு, வினோத்ராஜ் சார்பாக எனது நன்றிகள்.
சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள்.
கொட்டுக்காளி படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சூரி நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் இன்று(வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.