தமிழ்நாட்டின் கடன் சுமை ஏற்றம்தான் அதிமுகவின் சாதனை: தங்கம் தென்னரசு
2011ல் 1.30 லட்சம் கோடி கடன்; 2020ல் 4.85 லட்சம் கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தியதி அதிமுக.
தமிழ்நாட்டில் கடன் சுமை ஏறிக் கொண்டே போனதுதான் 10 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்கு நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப். 19) பதிலளித்துள்ளார்.
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது என தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு,
திமுக அரசின் கடனைப் பற்றி கவலைப்படும் பழனிசாமி, மோடி அரசின் கடனைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. 2014-ல் மன்மோகன் சிங் ஆட்சியில் ரூ. 54 லட்சம் கோடியாக இருந்த கடன் 10 ஆண்டுகளில் ரூ. 205 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக்குனிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்க வழிவகை செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தீர்கள்.
ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை.
2011 - 2012-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக இருந்த கடனைப் படிப்படியாக உயர்த்தி, 2020 - 2021-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள்.
கடமையைச் செய்யத் தவறிக் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் பத்தாண்டு அ.தி.மு.க. அரசின் சாதனை.
பழனிசாமி அளித்த பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க. ஆட்சியில் வருகிறது எனச் சொல்லியிருக்கிறார். வருவாயைப் பெருக்கும் பணியை திமுக செய்து வருகிறது.
தி.மு.க. அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது; மக்களுக்குப் பயன் தராது எனச் சொல்லியிருக்கிறார். அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள் என விமர்சித்துள்ளார்.