சென்னை: சேலம், கோவை அருசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
எழும்பூா் அரசு மருத்துவமனையிலும், மதுரையில் ராஜாஜி மருத்துவமனையிலும் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்படும் என்று 2022-23-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாட்டிலேயே முதல்முறையாக ரூ.6.97 கோடி மதிப்பீட்டில் வெளிநாடுகளிலிருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட சென்னை, எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் பிரசவ வளாகத்தை ஜூன் 7 ஆம் தேதி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இரண்டாவது செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் அந்த மையமும் திறந்து வைக்கப்பட இருப்பதாக அவா் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பேரவையில் சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதிலளிக்கையில், எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயற்கைக் கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம், கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வரும்.
மேலும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்ல, நாட்டில் வேறு எந்த அரசு மருத்துவமனைகளிலும் இல்லாத சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, டிஜிட்டல் எக்ஸ்-ரே, ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவிகள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பல, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளன என அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.