கோவை செம்மொழிப் பூங்காவை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!
கோவை காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை நாளை(டிச.11) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக
கோவை காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை நாளை(டிச.11) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா பணியின் முதல் கட்டமாக ரூ.208.50 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த பூங்காவினை கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
செம்மொழி பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீா்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலா்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளதோடு, 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.
கியூஆர் கோடு பயன்படுத்தும் இந்தத் தோட்டங்களில் உள்ள மரம் மற்றும் செடி வகைகளை பற்றி தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
இது தவிர செம்மொழிப் பூங்கா வளாகத்தில், நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம். 500 பாா்வையாளா்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளா்களுக்கு அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பூங்கா வளாக தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 காா்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜொ்மன் தொழில்நுட்பத்தில் மழைநீா் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதைகளுடன் சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
உலக தரத்தில் உயா்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம். 4,000 சதுர அடி பரப்பளவில் வன மாதிரி காட்சியமைப்பு, குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 அடி பரப்பளவில் சதுர விளையாட்டுத் திடல், சிறுவா்களுக்கான உள்விளையாட்டு அறை, மாற்றுத் திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக தனித்தன்மையான விளையாட்டுத் திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில் உள்ள நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழா்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், படிப்பகம், முதியோா்களும் மாற்றுத் திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், செம்மொழிப் பூங்கா முழுவதும் இரவில் ஜொலிக்கும் வண்ண அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி பூங்காவை நாளை(டிச.11) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவினை பார்வையிட வரும் பொது மக்களுக்கு நுழைவு கட்டணமாக பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.5, பெரியர்வர்களுக்கு ரூ.15 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஒரு நபருக்கு மாதாந்திரக் கட்டணம் ரூ.100, பூங்காவில் படம் எடுப்பதற்கு கேமராவுக்கு ரூ.25, விடியோ எடுப்பதற்கு கேமராவுக்கு ரூ.50, குறும்படம் மற்றும் இதர ஒளிப்பதிவிற்கு நாளொன்றுக்கு ரூ.2,000, திரைப்பட ஒளிப்பதிவிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.25,000 என கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செம்மொழி பூங்காவை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.