முகப்பு
தற்போதைய செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் 5 கொள்ளையர்கள் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளதைப் பற்றி..

Updated On : 14 பிப்ரவரி 2025, 10:03 pm IST
கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் வழிப்பறி கும்பலைச் சேர்ந்த 5 கொள்ளையர்கள் காவல் துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

காசியாபாத்தில் நேற்று (பிப்.13) இரவு வியாபாரியான சதீஷ் சந்த் கார்க் மற்றும் அவரது கணக்காளரான பப்லூ ஆகிய இருவரும் தங்களது வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தனர். அங்கு, அவர்களை வழிமறித்த கொள்ளையர்கள் அவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, இருவரிடமும் அதிகப் பணம் இருப்பதாக எண்ணி பப்லூவின் பையை பிடுங்க முயற்சித்துள்ளனர். அதனை அவர் தடுக்க முயன்றபோது அவரது காலில் கொள்ளையர்கள் தங்களது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அவர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர்கள் கொள்ளையடித்து சென்ற பையில், ரூ.2,800 பணமும் அவர்களது கடையின் சாவிகளும், கணக்கு புத்தகங்களும் இருந்துள்ளன.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, ரூ.8.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக வதந்திகள் பரவியதால் வியாபாரிகளிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்களை உடனடியாக பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சதீஷ் சந்த் கார்க்கின் குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்டது ரூ.2,800 மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிக்க: உலக சாதனைக்கு முயன்ற இந்திய வீரர் பலி!

இந்நிலையில், முராத் நகர் பகுதியில் இன்று (பிப்.14) காவல் துறையினர் வழக்கமான தணிக்கைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேரை வாகனத்தை நிறுத்துமாறு காவல் துறையினர் சைகை செய்துள்ளனர். ஆனால், அவர்கள் வாகனத்தை திருப்பிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

அவர்களை பிடிக்க பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேரது கால்களில் குண்டுகள் பாய்ந்தது. மேலும், ஒருவர் எந்தவொரு காயமுமின்றி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், மற்றொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஷாருக், அபிஷேக் ஜாதவ், நதீம், ஹரிஷ் மற்றும் ஷிவான்ஷ் ஆகிய 5 பேரிடமும் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் வியாபாரிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

முன்னதாக, தற்போது தப்பியோடிய 6வது நபரை தேடும் பணியை காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.