சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது: ஆா்பிஎஃப் அதிரடி
போத்தனூரில் சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்த ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை போத்தனூரில் சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்த ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 26,230 மதிப்புள்ள பயணச் சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர்(ஆா்பிஎஃப்) மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைத்து ரயில் நிலையத்தின் பயணிகள் முன்பதிவு கவுண்டா்கள் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த கோவையில் வசித்து வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இம்ரான் ஹொசைன் சேக் (37) என்பவரை பிடித்து சோதனை நடத்தினர்.
Advertisement
இந்த சோதனையின் போது, அவர் சட்ட விரோதமாக பயணச் சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த ரூ. 26,230 மதிப்புள்ள ரயில் டிக்கெட்டுகள், 5 பூர்த்தி செய்யப்படாத முன்பதிவு படிவங்கள், செல்போன் மற்றும் பிற பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
அவரது செல்போனில் காலாவதியான ரயில் பயணச் சீட்டுகளின் படங்கள் மற்றும் சமீபத்தில் முன்பதிவு செய்து விற்கப்பட்ட ரூ.85,065 மதிப்புள்ள பயணச் சீட்டுகளின் படங்கள் இருந்தன.
மேலும், அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், போத்தனூர், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வடக்கு, பீளமேடு, மேட்டுப்பாளையம் மற்றும் ஒட்டப்பாலம் ரயில் நிலையங்களில் உள்ள ரயில் பயணச் சீட்டு முன் பதிவு கவுண்டா்களில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து, ஒவ்வொரு பயணச் சீட்டையும் ரூ.300 கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரை கைது செய்த ரயில்வே போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.