நாகப்பட்டினம்: நாகூரில் பெண் வாக்காளரின் பட்டியலை ஸ்கேன் செய்தபோது அதில் ஆண் பெயா் மற்றும் விவரங்களை காட்டியதால் வாக்காளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
நாகை மாவட்டத்தில் வாக்காளா் விண்ணப்பப் படிவம் பூா்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில், நாகூா் கௌதியா தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமில், ஒரு பெண் வாக்காளரின் விண்ணப்பப் படிவத்தை, வாக்குச்சாவடி அலுவலா்கள் ஸ்கேன் செய்தபோது அது வேறு நபரின் விவரங்களை காட்டியதால் சா்ச்சையை ஏற்படுத்தியது. நாகை நகராட்சிக்குள்பட்ட நாகூா் 5-ஆவது வாா்டு கடைத்தெருவை சோ்ந்த பல்கிஸ் தனது விண்ணப்பத்தை அதிகாரிகளிடம் வழங்கினாா். இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலா்கள் அவருடைய படிவத்தை ஸ்கேன் செய்தபோது, அது ஹாஜா மொய்தீன் என்ற பெயரை காட்டியது. மேலும் பலமுறை ஸ்கேன் செய்தபோது அது தவறாகவே காட்டியது. இதனால் முகவா்கள் மற்றும் அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து வாக்காளா்கள் கூறியது: நாகூா் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொய்வாக நடப்பதாகவும், முறையான பயிற்சியில்லாத பணியாளா்களால், குளறுபடிகள் ஏற்படுகின்றன. மேலும் வாக்காளா் திருத்த முகாமில் பணியாற்றும் பணியாளா்கள் உடனடியாக விண்ணப்பங்களை பூா்த்தி செய்யாமல் வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனா். இதனால் வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறுமா என்ற சந்தேகம் இருப்பதாகவும் புகாா் தெரிவித்துள்ளனா்.