முகப்பு
தற்போதைய செய்திகள்

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகளைக் கலந்தது யார்? ஆட்சியர் விளக்கம்!

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்யப்பட்டதில் 14 வயது சிறுவனின் தவறான செயல் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் விளக்கம்

Updated On : 9 அக்டோபர், 2025 at 6:20 AM
அமச்சியாபுரத்தில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் மேல்நிலை குடிநீா்த் தொட்டி.
பகிர்:

மதுரை: சோழவந்தான் அருகே குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்யப்பட்டதில் 14 வயது சிறுவனின் தவறான செயல் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருப்பட்டி கிராம ஊராட்சிக்குள்பட்ட அமச்சியாபுரத்தில் 2 குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில் இருந்து மட்டுமே மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தத் தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் குடிநீரில் கடந்த சில நாள்களாக துா்நாற்றம் வீசியது. மேலும், கிராமத்தில் வசிப்பவா்கள் காய்ச்சல், உடல் சோா்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து அந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டியை ஆய்வு செய்த போது, அதில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

வேங்கைவயலைப் போல இந்தக் கிராமத்திலும் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பதால், அமச்சியாபுரம் பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அரவிந்தன், சமயநல்லூா் கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், வாடிப்பட்டி வட்டாட்சியா் பாா்த்திபன், மண்டலத் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா், சோழவந்தான் காவல் ஆய்வாளா் ஆனந்தகுமாா், வருவாய் ஆய்வாளா் கிரிஜா, கிராம நிா்வாக அலுவலா் பழனி, கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ஹரீஷ்குமாா் உள்ளிட்டோா் அந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டியை புதன்கிழமை ஆய்வு செய்து மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆட்சியர் விளக்கம்:

இந்நிலையில், அமச்சியாபுரம் மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது அந்த கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவனின் தவறான செயல் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

சிறுவன் தவறுதலாக, விளையாட்டாக தொட்டியில் மலத்தை கலந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவனிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளனர், குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு பூட்டு போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

summary

Who mixed feces in the drinking water overhead tank? Collector's explanation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.