காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறித்து...
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய 5 பேரவைத் தொகுதிகள் உள்ளன.
பேரவைத் தேர்தலையொட்டி மாவட்டத்தில் 181 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, புதன்கிழமை அனைத்து சாவடிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்பட்டன.
Advertisement
வாக்குப் பதிவு நாளான இன்று (ஏப். 9) காலை 7 மணி முதல் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்துவருகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், வேறு 12 வகையான ஆவணங்களில் ஒன்றை கொண்டுச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி உரிய ஆவணங்களுடன் வாக்காளர்கள் அவரவர் பகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் மக்களைக் கவரும் வகையிலும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையிலும் தனித்துவமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பசுமை பார்வையில் தனித்துவமான வாக்குச் சாவடி, பிங்க் நிற வாக்குச் சாவடி, மகளிர் மட்டும் பணியாற்றக்கூடிய வாக்குச் சாவடிகள் என தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் பல தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிதா ரதி, வாக்குச் சாவடிகளுக்குச் சென்று பார்வையிட்டு வருகிறார். ஒவ்வொரு மணி நேரத்துக்குக்கும் வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு சதவீதத்தை தேர்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புப் படையினர், புதுவை மாநில போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.