காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசை கலைக்க வேண்டும் என்ற காந்தி கண்ட கனவை ராகுல் காந்தி எப்படியாவது நிறைவேற்றி விடுவார் என நடிகை விந்தியா பேச்சு குறித்து....
கோவை: சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசை கலைக்க வேண்டும் என்ற காந்தி கண்ட கனவை ராகுல் காந்தி எப்படியாவது நிறைவேற்றி விடுவார், செல்ல பெருந்தகை திமுகவில் இணைத்து விடுவார் என அதிமுக கொள்கை பரப்புச் செயலரும், நடிகையுமான விந்தியா தெரிவித்தாா்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாரை ஆதரித்து நடிகை விந்தியா இடையர்பாளையம், டி வி எஸ் நகர், உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது நடிகை விந்தியா பேசியதாவது:
Advertisement
தமிழகத்துக்கு எந்த பிரச்னை வந்தாலும் திரும்பி கூட பார்க்காத காங்கிரஸ், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசை கலைக்க வேண்டும் என்ற காந்தி கண்ட கனவை தமிழ்நாட்டில் செல்வப் பெருந்தகையும், ராகுல் காந்தியும் நிறைவேற்றி விடுவார்கள். ராகுல் காந்தி எப்படியாவது காங்கிரசை கலைத்து விடுவார், செல்ல பெருந்தகை காங்கிரசை திமுகவில் இணைத்து விடுவார்.
60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் 30 சீட்டுக்காக திமுகவின் காலை பிடித்துக் கொண்டிருக்க, பத்து பைசாவுக்கு தேராத தேமுதிக பத்தே நிமிடத்தில் பேரம் பேசி 10 சீட்டை வாங்கி விட்டது. காது கேட்காதவனிடம் பாட்டு பாடுவதும் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் ஒன்றுதான். இதனால் ஒரு பிரயோஜனம் இல்லை என்றார்.
மு. க. ஸ்டாலின் மாதம் ரூ.1000 தருவதாக பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, 28 மாதங்கள் கழித்து தான் ரூ.1000 கொடுக்க ஆரம்பித்தார். அதுவும் தகுதியானவர்களுக்கு தான் ஆயிரம் என்றார். அடுத்தவர் பொண்டாட்டிக்கு தகுதி இருக்கா இல்லையா என்று சொல்வதற்கு ஸ்டாலின் யார்?
திமுகவையே தள்ளுபடி செய்வோம்
கோயம்புத்தூர் முழுவதும் டோக்கன் கொடுக்குறாங்க அந்த டோக்கனை வைத்து இன்றைக்கு இருக்கிற விலைவாசிக்கு இவங்க சொல்ற ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எப்படி வாங்க முடியும். திமுகவினர் எல்லா கடனையும் தள்ளுபடி செய்வேன்னு சொல்லுவாங்க. ஆனால் செய்ய மாட்டாங்க. நாங்க ஆட்சிக்கு வந்தால் திமுகவையே தள்ளுபடி செய்வோம்.
கடந்த முறை அதிமுக ஆட்சியின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதியும் நிறைவேற்றி உள்ளோம். தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, இலவச மிதிவண்டி, அம்மா உணவகம், 100 யூனிட் இலவசம் மின்சாரம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதம் ஒருமுறை மின்கட்டணம் அளவீடு எடுப்பேன் என கூறிவிட்டு நான்கு முறை மின்கட்டணத்தை உயர்த்தினர். மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிப்பது போய் மின் கட்டண பில் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது.
அதிமுக ஜெயித்ததும் தாய்மார்களுக்காக ஆண்டுக்கு மூன்று சிலிண்டர், 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும், ஏழைகளுக்காக அம்மா இல்லத் திட்டம், கல்லூரி முடித்து வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ரூ.2000, பள்ளி முடித்து வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். குலவிளக்கு திட்ட மூலம் இனி மாதம் ரூ.2000 வழங்கப்படும். சிறு வியாபாரிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பொங்கல் தொகுப்போடு ரூ.1000 வழங்கப்படும். தீபாவளிக்கு தரமான வேஷ்டி சேலை வழங்கப்படும். தாய்மார்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பிரிட்ஜ் வழங்கப்படும். அனைத்து மருத்துவ மாணவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த ஐந்தாண்டு ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்டத்தை போக்க ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.10,000 வழங்கப்படும். மேலும், பெண்களுக்கு வழங்கப்படுவது போல் ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும். மகளிா் உரிமைத் தொகையாக ரூ. 5,000 வழங்கியது பெண்களின் வாக்குகளைப் பெறத்தான். எனவே, பெண்கள் திமுகவை ஒருபோதும் நம்ப வேண்டாம். எனவே அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்என்றாா் அவா்.