தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் எச்சரிக்கை
தேர்தல் முடிந்ததுமே பணவீக்கத்தின் வெப்பம் மக்களை சுட்டெரிக்கிறது என ராகுல் கருத்து...
மேற்கு வங்கத்திற்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப் பதிவுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்த்தப்படலாம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:
''தேர்தல் காலம் முடிந்தது; பணவீக்கத்தின் வெப்பம் அதிகரிக்கிறது. நீங்கள் பாருங்கள், ஏப். 29 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயரும்.
Advertisement
Advertisement
எரிபொருள் விலை குறைவாக இருந்தபோது அதன் லாபத்தை மோடி அரசு தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டது. இப்போது எரிபொருள் விலை உயரும்போது, அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு மோடி அரசு மெளனமாக இருக்கிறது.
மலிவாக இருக்கும்போது அரசு கொள்ளை அடிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது அதனை மக்கள் மீது சுமத்திவிடுகிறது'' என ராகுல் பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்திற்கு முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப். 23 ஆம் தேதி முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நாளை (ஏப். 29) நடைபெறவுள்ளது.
வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்துள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பின்னர் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதில், வெற்றி வாய்ப்புகள் எந்தெந்த கட்சிகளுக்கு இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், மேற்கு வங்கத்திற்கு மட்டும் நாளை 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு முடிந்தன. 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.