மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை
கடந்த 5 ஆண்டுகளாக, தீயசக்தி திமுக நடத்தும் மக்கள் விரோத ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என அண்ணாமலை கூறியது தொடர்பாக...
தமிழகத்தில் பெண்கள், இளைஞர், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் துரோகம் செய்து, கடந்த 5 ஆண்டுகளாக, தீயசக்தி திமுக நடத்தும் மக்கள் விரோத ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அமமுக சார்பில் திருச்சி மேற்கு தொகுதி போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
Advertisement
திமுக ஆட்சியில் பெரும் ஊழல்களை செய்து வலம் வருபவர் அமைச்சர் கே.என்.நேரு. நகராட்சி நிர்வாக துறையில் வேலை வாங்கி தருவதற்கு பணம் வாங்கி ரூ.888 கோடி ஊழல், ஒப்பந்தம் வழங்குவதில் ரூ.1,020 கோடி ஊழல், பணியிடமாற்றம் செய்வதற்கு பணம் வாங்கி ரூ.365 கோடி ஊழல் என அவர் செய்த ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை மூன்று முறை கடிதம் அனுப்பியும் ஒரு நடவடிக்கையும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இணைந்து இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டோம். அதை விசாரித்த நீதிமன்றம், கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், அதையும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
ஒரு ஊழல் வழக்கிலேயே செந்தில் பாலாஜி அவர்கள் 400 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். மூன்று ஊழல் வழக்குகள் உள்ள கே.என்.நேருவுக்கு வாக்களிக்க திருச்சி மக்களே தயாராக இல்லை. 2015 ஆம் ஆண்டு, இந்தியாவின் சுத்தமான மாநகராட்சிகள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருந்த திருச்சி இன்று 59வது இடத்தில் உள்ளது. திருச்சியில் குடிநீரும் கழிவுநீரும் கலந்ததால் இரண்டு அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த அவலத்தை தமிழகமே பார்த்தது. இப்படி திருச்சி மாநகரை மோசமான நிலைக்கு மாற்றியிருக்கும் திமுகவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து விடக்கூடாது.
திருச்சி மாநகருக்கு திருப்பம் கிடைத்திட, வளர்ச்சியடைந்த திருச்சி மேற்கு தொகுதி உருவாகிட, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் ராஜசேகரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.