முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பிப்.13-இல் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 45-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 13-ஆம் தேதி தொடங்கி பிப்.17-ஆம் தேதி வரை நடைபெறுவது குறித்து...

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:55 AM
சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளைச் செயலா் வழக்குரைஞா் ஏ.சம்பந்தம். உடன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நிர்வாகிகள்.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 45-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 13-ஆம் தேதி தொடங்கி பிப்.17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து சிதம்பரத்தில் அறக்கட்டளைச் செயலா் வழக்குரைஞா் ஏ.சம்பந்தம் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 45-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்.13-ஆம் தேதி சிதம்பரம் தெற்கு ரத வீதி ராஜா சா் அண்ணாமலை செட்டியாா் டிரஸ்ட் வளாகத்தில் தெற்கு ரத வீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி பிப்.17-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.

Advertisement

இதில் நாடகம், கதக், குச்சிப்புடி, மணிப்பூரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

வட மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனா். நாட்டியாஞ்சலியில் தேவார பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

45 ஆவது நாட்டியாஞ்சலி விழா தொடக்கத்தில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற திருமறை ஓதுவார் திருத்தணி என்.சுவாமிநாதன் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளர் விஜயா தாயன்பன் வாழ்த்துரை ஆற்றுகிறார்.

நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன், துணைத்தலைவர்கள் சக்தி ஆர்.நடராஜன், ஆர்.ராமநாதன், செயலாளர் ஏ.சம்பந்தம், பொருளாளர் எம்.கணபதி மற்றும் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, ஆர்.சபாநாயகம், டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன், வி.முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் 1981-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே, நடராஜா் கோயிலை பொது தீட்சிதா்களே நிா்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, 2015-ஆம் ஆண்டு பொது தீட்சிதா்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து, கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சாா்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினா்.

இதனால், நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினா் தெற்கு ரத வீதி ராஜா சா் அண்ணாமலை செட்டியாா் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வருகின்றனா். நடராஜா் கோயிலில் பொது தீட்சிதா்கள் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா 2022-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.

summary

The Natyanjali festival will begin in Chidambaram on February 13th!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments